Pages

Sunday, December 31, 2017

3 Frew Comics 1748–The Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 1வேதாளர் (The Phantom) காமிக்ஸ் கதைகள் தினசரி வரும் ’டெய்லி ஸ்ட்ரிப்’ ஆகவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ’சன்டே ஸ்ட்ரிப்’ ஆகவும் உலகமெங்கும் தினசரிகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஃப்ரூ என்ற காமிக்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டுமுதல் இவரது கதைகளை கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டிறுதியில் பல சிக்கல்களால் நிற்கும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுதான் டட்லி ஹொகார்த், ரெனே வொய்ட் மற்றும் க்ளென் ஃபார்ட் ஆகியோர் 2016ல் ஃப்ரூ காமிக்ஸை எடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்த வேதாளரது கதைகளை 2005ஆம் ஆண்டிலிருந்து வரைந்து வந்தவர் ஓவியர் பால் ரயான். இவர் 2016, மார்ச் 77ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது நினைவாக, இந்த ஸ்பெஷல் காமிக்ஸை ஃப்ரூ வெளியிட்டது. வழக்கமாக, வண்ண அட்டைப்படத்துடன் கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் ஃப்ரூ, கருப்பு வெள்ளை அட்டையுடன் முழு வண்ணக் காமிக்ஸை முதன்முறையாக ரயானின் நினைவாக வெளியிட்டது.

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

31st December 2017 – Frew Comics Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 03அறிமுகம்: முதல் வேதாளர் கிரிஸ்டோபர் வாக்கர், அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸுடன் பணிபுரிந்தவரின் மகன். 20-வது வயதில் அப்பாவுடன் கப்பலில் சென்றபோது கடற்கொள்ளை குழுவால் தாக்கப்பட்டு, கப்பல் மூழ்கிவிடுகிறது. அந்தக் கப்பலில் இருந்து தப்பிய ஒரே ஆள் வாக்கர் என்ற வேதாளர். அவரை பாந்தர் எனும் ஆப்பிரிக்கப் பிக்மி (குள்ள) இனத்தவர் காப்பாற்றுகின்றனர். அப்போது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக உறுதி எடுத்துக்கொள்கிறார் வேதாளர். அதற்குப் பிறகு வாக்கர் என்ற வேதாளரும் அவருடைய வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போராடும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். வெளியுலகைப் பொறுத்தவரையில் வாக்கரும் அவருடைய வாரிசுகளும் ஒரே ஆள் என்றே நம்புகிறார்கள். அதனால் வேதாளர் சாகாவரம் பெற்றவர் போலவும், அவரை கொல்லவே முடியாது என்ற கருத்தும் பரவியுள்ளது. இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். ஹீரோ என்ற குதிரையில்தான் வேதாளர் வருவார், எப்போதும் அவருடன் டெவில் என்ற நாயும் உடன் இருக்கும்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 20வேதாளரின் மோதிரங்கள்: வேதாளரின் வலது கையில் இருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதன் மூலம் வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக அது பதிந்துவிடும். இடது கையில் இருப்பது அனைவரும் மதிக்கும் நல்ல சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று அர்த்தம் கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும். இது எங்கே இருக்கிறதோ அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று அர்த்தம்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 2தலைப்பு: Terror’s Mutiny

உருவாக்கியவர்: லீ ஃபாக்

கதாசிரியர்: டோனி டி பால்

ஓவியர்: பால் ரயான்

பதிப்பாளர்: ஃப்ரூ காமிக்ஸ்

எடிட்டர்: டட்லி ஹொகார்த்

பக்கங்கள்: 36 முழு வண்ணப் பக்கங்கள்

விலை: 278 ரூபாய்

வெளியீடு (அச்சில்): ஏப்ரல் 2016

வயது வரம்பு: 9+

One Liner: அதிபரைக் கடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் வேதாளர்!

கதைச் சுருக்கம்: பெங்கல்லாவின் அதிபர் லமான்டா லுவாகா ஃபெலிகன் கடற்கரைக்கு விஜயம் செய்யும்போது, கப்பற்படை கமாண்டரிடம் அவரைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக நம்ப வைக்கின்றனர். அதைப்போலவே, ராணுவத்திடமும் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளே அவரைக் கடத்துகின்றனர்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 29

ஆனால், அதிபர் தீவிரவாதிகளின் கையில் சிக்குண்டு இருக்கிறார் என்பதே இரு படையினருக்கும் தெரியாமல் இருக்க, வழக்கம்போல வேதாளர் அங்கே வருகிறார். எதற்காக அதிபரைக் கடத்த திட்டமிட்டார்கள் என்பதை அறிந்து அந்த சதியை முறியடிக்கிறார் வேதாளர்.

Verdict: வேதாளரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.

குறிப்பு: வேதாளரை உருவாக்கிய லீ ஃபாக்கின் மரணத்திற்குப் பிறகு அவரது கதைகளை எழுதி வருபவர் டோனி டி பால். வேதாளரின் எதிரிகளிலேயே மிகக் கொடூரமானவனாகக் கருதப்படும் சாட்டு (பைதன்) என்ற பாத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். இந்தக் கதையிலும் பைதன் வருகிறார். இந்தக் கதை 21 ஏப்ரல் 2014 முதல் 23 ஆகஸ்ட் 2014 வரை தினசரி நாளிதழில் வெளி வந்தக் கதை.

ஆன்லைனில் வாங்க : https://www.phantomcomic.com.au/collections/all/products/issue-1748-kiwi-cover-2016

Tuesday, August 22, 2017

5 இரவே.. இருளே.. கொல்லாதே! (கிராஃபிக் நாவல் அறிமுகம்)

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Coverகதைச் சுருக்கம்: ஹாலிவுட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது நேரிடும் ஒரு விபத்தினால், ஒரு சிறிய நகரில் தங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு வினையூக்கியாக மாறி தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார்? வேட்டை ஆடப்படுவது யார்? என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.

Child Abuseக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்க காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்கமுடியாத பாவங்களுக்கு துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு ”வெளிப்படையாக தெரிவதை நம்பாதே” என்ற சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Author Joel Colledeவிமர்சன பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு க்ராபிஃக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.

ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் இரவே.. இருளே.. கொல்லாதே! ஒரு அமானுஷ்ய த்ரில்லர் வகை க்ராபிஃக் நாவல். இதில் குறியீடாக பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராக சொல்லப்பட்டு இருப்பதாலும் இந்த க்ராபிஃக் நாவலை மேலோட்டமாகப் படிப்பதைத் தவிர்த்து ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபலமான ஹாலிவுட் டீவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் இடையிடையே Tribute செய்யும் வகையில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளதால், அதைப்பற்றியும் ஓரளவுக்கு விவரம் சேகரித்தால், வாசிப்பின் சுவை கூடும்.

உதாரணமாக, சில காட்சிகளைப் பார்க்கலாம்.

  • கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி பெட்ஸி மஹோர்ன் காரை ஓட்டிக்கொண்டு இருக்கையில், சற்றே அயர்ந்து ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும்போது அன்னியன் ஒருவனால் எழுப்பப்படுவது (The Invaders, 1967-68 TV Sries) தெ இன்வேடர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரின் (மறக்கமுடியாத) ஆரம்பக் காட்சி.
  • கதை நிகழும் சிறு நகரமான க்ரீப்பர் க்ரீக்கில் அப்போது ஓடிக்கொண்டு இருக்கும் லீ கர்ட்டீஸ் படம் (Jamie Lee Curtis, Hollywood’s Scream Queen in the Late 70’s), ஒரு வகையில் இந்தக் கதைக்கு தொடர்பு உள்ளதே.
  • கதை முடியும்போது தியேட்டரில் இருக்கும் போஸ்டர் (The Thing from Outer Spcae – Howard Hawk’s / John Carpenter Film’s) படத்தின் மையக் கருவிற்கு சம்பந்தமில்லை என்றாலுமே, கதையின் போக்கிற்கு (வெளி ஆள் ஒருவரின் வருகை) தொடர்புடையது.

என்று பல சுவையான விஷயங்கள் வாசிப்பின் பிறகும் கதைக்களன் சார்ந்த நினைவுகளுக்கு அசை போட பயிற்சி அளிக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Artist Denysஆசிரியர் பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு, கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். கதாசிரியர் ஜோயலின் வழக்கமான டெம்ப்ளேட்டான யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் தீயவர்களும் இல்லை என்ற பாணி துவங்கியது இந்தக் கதையில்தான்.

பின்தொடரும் நிழலாக வரும் கடந்தகாலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப்போல சரியான நேரத்திற்காக காத்து கிடக்கின்றன.

உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்ல தலைதூக்கும் மனிதத்தன்மை, வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாக இருக்கின்ற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே மெய்சிலிர்க்க வைக்கின்றன.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Colourist Hubert Boulardஇணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில், ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரசியத்துடன் எழுதுவதைப்போல பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைப்போலவே அதனை சரியாக புரிந்து, மொழியாக்கம் செய்வதுவும் ஒரு சிரமமான வேலையே. அதனை செம்மையாக செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன். கதையில் உணர்ச்சிகரமான பல காட்சிகளை எளிய தமிழில் செம்மைப் படுத்தியிருக்கும் அவருக்கு ஒரு ஷொட்டு!

ஃப்ரான்சில் ஆண்டுக்கு ஒன்று வீதமாக மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவந்த இக்கதை வரிசையை ஒரே புத்தகமாக வெளியிட்டு இருப்பதால், அடுத்த பாகம் எப்போது? என்று காத்துக்கிடக்கும் கவலை நமக்கில்லை. முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களை போல வேகமாக நகர்கிறது. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு, மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Covers

ஒரு நேர்க்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான ஒரு B Grade ஹாலிவுட் படத்தை நிகர் செய்யும் இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார், கதாசிரியர் ஜோயல். இந்த வித்தையில் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவரது நெருங்கிய நண்பரான ஓவியர் டெனிஸ். ஒருவேளை லீனியராக சொல்லப்பட்டிருந்தால், கதையில் இத்தனை சுவாரசியமும், மர்மமும் இருந்திருக்காதோ என்னவோ?

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe French Cover Part 1தமிழில் காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் ஆயிரத்தை கடந்து இருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் புத்தகத்தின் சில பக்கங்களில், அடுத்து எந்த கட்டத்தைப் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த போடப்பட்டு இருக்கும் அம்புகள் புதியதாக காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்போருக்கு உதவியாக இருக்குமோ என்னவோ, ஆனால், தொடர்ந்து காமிக்ஸை படித்து வருபவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுவதாகவே தெரிகிறது.

Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.

கதை: ஜோயல் கல்லெட் ஓவியம்: டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்

வண்ணங்கள்: ஹுயுபெர்ட் பொலார்ட் தமிழாக்கம்: எஸ். விஜயன்

வெளியீடு: லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.

விலை: 150 ருபாய். 146 முழு வண்ணப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

வகை: க்ராபிஃக் நாவல் அமைப்பு: அமானுஷ்ய த்ரில்லர் (18 +)

களம்: அமெரிக்காவின் ஒரு சிறுநகரம் வருடம்: கி.பி 2000

One Liner: தொடர் கொலைகளை செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

தீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு தோட்டாக்கள் (4/6).

குறிப்பு: தி இந்து தமிழ் நாளிதழில் கிராஃபிக் நாவல்களைப் பற்றி அறிமுகங்களும் விமர்சனங்களும் செய்யலாம் என்று நவம்பர் 2014ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியபோது வெளியான இரண்டாவது கட்டுரை இது.

இணையத்தில் படிக்க: தி இந்து தமிழ் நாளிதழ் – இணைய லிங்க்

07th Nov 2014 The Hindu Tamil Ilamai Inimai Supplement Page No 4 Graphic Novel Review

Monday, August 21, 2017

1 வரையறைகளை அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்ட கலகக்காரன்: பௌன்சர் கிராஃபிக் நாவல் அறிமுகம்

Alejandro Jodorowsky Profile 1அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி – Unlikely Godfather of Defying Definition

1965 மே மாதம்: ஃப்ரான்சில் நடைபெற்ற பாரிஸ் சுதந்திர கருத்தியல் வெளிப்பாட்டு திருவிழாவின் ஒரு பகுதியாக ஆன்மீக அருளின் அற்புத நாடகம் (Sacramental Melodrama) என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. மூன்று பேர் கொண்ட குழு ஒன்று இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறது என்பதைத்தவிர, இது எதைப்பற்றிய நிகழ்வு, இதன் உள்ளடக்கம் என்ன? என்பது பற்றி கூடி இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒன்றுமே தெரியாது.

நிகழ்ச்சியின் முதல் கட்டமாக, உடலை இறுக்கிப்பிடிக்கும் கருப்பு தோலாடையாலான உடையணிந்த இளைஞர் ஒருவர், இரண்டு வாத்துக்களின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அறுபட்ட வாத்துகள் மேடையிலேயே இரத்தம் சிந்தி, துடிதுடித்து இறந்தன. இதன்பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அதைப் பார்த்தவர்கள் வாழ்விலேயே மறக்கவியலா அனுபவங்களாக அமைத்து விட்டது என்றால், அது மிகையல்ல.

  • தன்னுடைய நெஞ்சில் ’டேப்’ மூலம் இரண்டு உயிரோடிருக்கும் பாம்புகளை ஒட்டச்செய்துக்கொண்டு, அவை மெல்ல மெல்ல அசைய, அந்த அசைவுகளோடு மேடையில் நடந்து வந்தார் அதே இளைஞர்.
  • ஒரு இளைஞன் தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கலைந்து, நிர்வாணமாக்கிக் கொண்டு, சாட்டையால் அடித்துக்கொண்டு, உடலை வருத்திக்கொண்டார்.
  • உரித்த கோழி ஒன்று சிலுவையில் அறையப்பட்டது.
  • நிகழ்ச்சியை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையாளர்கள் மீது திடீரென்று ஆமைகளை வீசினார்கள்.
  • ஒரு யூத மதகுருவை கொலை செய்வதை போன்ற காட்சி மேடையில் அரங்கேறியது.
  • உடல் முழுவதும் தேன் தடவப்பட்ட ஒரு இளம் பெண்ணை நிர்வாணமாக வரச்செய்தார்கள்.
  • மேடையில் ஆறடி உயரத்தில், அட்டையால் செய்யப்பட்ட ஒரு பெண்குறியைக் கொண்டுவந்தார்கள்.
  • பதப்படுத்தப்பட்ட வாதுமைப் பழங்களை பார்வையாளர்கள் மீது வீசினார்கள்.

Panic Movementமேலே கூறப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன. இப்படி ஒரு நிகழ்வை நடத்தி முடித்த பின்னர், அந்த மூன்று இளைஞர்களும் தங்களது இயக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினர். கிரேக்க இதிகாசத்தில் ’பேயோன்’ என்று ஒரு கடவுளைப்பற்றிக் குறிப்பிட்டு இருப்பார்கள். பேயோன்தான் கலைகளின் விமர்சன கடவுள். இவரது பெயரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பெயர்தான் Panic Movement. இதனை பதட்டம், பீதி நிறைந்த ஒரு இயக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இயக்கத்துக்கான காரணம்: இருபதாம் நூற்றாண்டில் கலை மற்றும் கலை சார்ந்த துறைகள் அனைத்துமே ’சர்ரியலிசம்’ எனப்படும் மிகையதார்த்த பாணியில் மாறிக்கொண்டு இருப்பதைக் கண்டு, இதற்கு ஒரு மாற்று இயக்கம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதே ’பேனிக் மூவ்மெண்ட்’. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே, ’சர்ரியலிசம்’ அப்போதைய சமூகத்தில், கலை மற்றும் இலக்கியத் தளங்களில் முக்கியமான ஒன்றாக உருவாவதை தடுத்து / தவிர்த்து, அதற்கு மாற்றாக ஒரு இயக்கத்தை நிறுத்தப் போராடுவதாகும். இதனை செயல்படுத்த இவர்கள் மேற்கொண்ட வழிமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். மக்கள் தங்களுக்குள்ளே மட்டுப்படுத்தி வைத்து இருக்கும் அழிவு ஆற்றலைத் தூண்டும் எண்ணங்களை வெளியேற்றிவிட்டால், அவர்கள் அமைதியை தேட ஆரம்பிப்பார்கள். அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் செயல்களின் மூலம் அவர்களுக்குள்ளே இருக்கும் அந்த அழிவுசக்தியை வெளியேற்ற முயல்வதே இந்த இயக்கத்தின் எண்ணம்.

உதாரணமாக உங்களுக்குள்ளே ஒருவிதமான அழிவு சக்தியை தூண்டும் எண்ணம் உருவாகும்போது, அதனை நீங்கள் இது போன்ற செயல்பாடுகளால் கடந்து விட்டால், உங்களின் சிந்தனையை நீங்கள் வேறு ஏதேனும் ஆக்க சக்திக்கு பயன்படுத்தலாம் அல்லவா? உங்களை அழிவு சக்திக்கு தூண்டும் அந்த உத்வேகம் இதனால் மட்டுப்படுத்தப்பட்டு, வேகமிழந்து, செயலற்று போய்விடும். இதனால், சமூகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

நான்கு மணி நேரம் மக்களை தொடர்ந்து வியப்பிலாழ்த்திய இந்த இயக்கத்தின் செயல்களை, கொள்கைகளை வழிவகுத்தவர்கள் மூவர்:

  • ஒஹனந் தொபோர் (Roland Topor)
  • ஃபெர்னாந்தோ அஹபால் (Fernando Arrabal) மற்றும்
  • இந்த கட்டுரையின் நாயகனான அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி (Alejandro Jodorowsky).

ajதுன்பியல் நிகழ்வான பிறப்பு: அலேஹாந்ரோவின் பெற்றோர் (ஜெய்மீ மற்றும் சாரா) ரஷ்யாவில் இருந்து சீலேவுக்கு அகதியாக வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு ராக்வெல் என்று ஒரு மகள் இருந்தாள். தன்னுடைய கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் சாரா சிரித்து பேசுவதைக்கண்ட ஜெய்மீ கோபம் கொண்டு, தனது மனைவியை அடித்து, துன்புறுத்தி வன்கலவியில் ஈடுபட்டதன் விளைவாக பிறந்தவர்தான் அலேஹாந்ரோ. இப்படி ஒரு மகன் பிறப்பதையே விரும்பாத சாரா, அலேஹாந்ரோவின் நான்கு வயதில் வெளிப்படையாகவே “உன் மீது என்னால் அன்பு செலுத்த இயலாது” என்று தெரிவித்திருந்தார். இருளிலும் பின் தொடரும் நிழலாக இருந்த தனிமையைக் கடக்க, வாசிப்பு என்ற வலி நிவாரணியை நாடினார், அலேஹாந்ரோ.

இவரது சகோதரியான ராக்வெலுமே இவரை நிராகரிக்க, சமூகத்தால் மரியாதை இல்லாமல் நடத்தப்பட்ட ஒரு அகதியின் குடும்பத்தில், தனித்த தீவாக இவரது இளமை கழிந்தது. தனிமையின் வலியே மீளாத்துயரை தரவல்லது. அப்படியிருக்க, நிராகரித்தலின் விழுப்புண்ணும் ஒன்றுசேர்ந்து தற்கொலை எண்ணங்கள் துரத்தியபோது, இவரை காப்பாற்றியது, கவிதைகள்.

aj 2ஒன்பது வயதில் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்த இவர், தன்னுடைய பதினாறாவது வயதில் இலக்கியப் பத்திரிக்கைகளில் கவிதை எழுத ஆரம்பித்தார். இவருடைய முதல் கவிதையும் லத்தீன் அமெரிக்க கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படும் நிக்கநோர் செகுந்தோ பாராவின் கவிதையும் ஒரே பத்திரிக்கையில் அடுத்தடுத்த பக்கங்களில் பிரசுரம் ஆனது (தான் எழுதிய கவிதைகளை வாசித்துவிட்டு அவற்றுடனான தன் உறவை முறித்துக்கொள்ளும் பாராவைப்பற்றி நிறைய சொல்லவேண்டி இருக்கிறது, ஆனால், இது அவரைப்பற்றிய கட்டுரையல்ல என்பதால், கூகுளாண்டவரின் துணையுடன் அவரைத் தேடி படியுங்கள்). கல்லூரியில் உளவியல் மற்றும் தத்துவம் சார்ந்த படிப்பை இரண்டாவது ஆண்டிலேயே கைவிட்டுவிட்டு, ஒரு சர்க்கசில் கோமாளியாக வேலைக்கு சேர்ந்தார், அலேஹாந்ரோ. பிறகு, நாடகங்களில் நாட்டம்கொண்டு, ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார்.

பாரிஸ் பயணமும், மூன்று லட்சியங்களும்: 1953ல், தன்னுடைய 23ஆவது வயதில், ஃப்ரான்சுக்கு மூன்று லட்சியங்களுடன் பயணித்தார், அலேஹாந்ரோ.

  1. மார்செல் மார்சௌவிடமிருந்து ”மைம்” கலையை கற்பது (வார்த்தைகளின்றி செய்கைகளால் நடிப்பதே ”மைம்”).
  2. ஆந்ரே பஹ்தூனிடம் ”சர்ரியலிசம்” பற்றி தெரிந்து கொள்வது, மற்றும்
  3. சர்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தைப் பற்றி படிப்பது.

இவை மூன்றையும் செயல்படுத்தியபிறகு மார்செலின் குழுவுடன் பலநாடுகளுக்கு சென்று, திரும்பிய இவர் 1957ல் தனது கலைப்பயணத்தை ஒரு குறும்படத்துடன் ஆரம்பித்தார். தாமஸ் மானின் கதையைத் தழுவி, முழுக்க முழுக்க ”மைம்” பாணியில் எடுக்கப்பட்ட ”துண்டிக்கப்பட்ட தலைகள்” என்ற இந்த இருபது நிமிட படம், வசதியின்மையால் இவரது அறையிலேயே படமாக்கப்பட்டது. செலவழிக்கப் பணமில்லாமல், குறைந்தபட்ச வசதிகளுடன் எடுக்கப்பட்ட இது, இயக்குநர் ழான் காக்டோவால் புகழப்பட்டு, புகழின் உச்சியைத் தொட்டது. தொலைந்து போனதாக கருதப்பட்ட இந்தப்படத்தின் பிரதி சமீபத்தில்தான் மீட்டெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் மெக்சிகோவுக்கு சென்று, அங்கு பிரபலமான நாடகக்குழுவில் சேர்ந்தார், அலேஹாந்ரோ. அறுபதுகளின் ஆரம்பத்தில் ஃப்ரான்சுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே அடிக்கடி பயணித்தபோது, உதித்ததுதான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த ’பேனிக் மூவ்மெண்ட்’. 1962ஆம் ஆண்டு ஆந்ரேவிடம் ’சர்ரியலிசம்’ பற்றிய விவாதத்தில், கலைத்துறை சர்ரியலிசத்தையும் கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொண்டு, இவர் தன்னுடைய நண்பர்களுடன் உருவாக்கிய இந்த இயக்கம், நவீன சமுதாயத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியது.

இயக்கத்தை பொதுமக்களிடையே செயல்முறையில் விவரித்துவிட்டு, இவர் செய்த முதல் காரியம் ஒரு காமிக்ஸ் கதையை எழுதியதே. ஃபெர்னாந்தோ அஹபால் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்த ’அனிபால் 5’ என்ற காமிக்ஸ் கதையிலுமே பேனிக் மூவ்மெண்டின் பல கோட்பாடுகளைக் காணலாம். இந்த காமிக்ஸ் கதைக்கு பிறகு, இவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினார்.

ஃபேண்டோ & லிஸ் (1968): உலக அழிவுக்குப் பின்னர் மீதமிருக்கும் தரிசு நிலங்களிலும், இடிபாடுகளிலும் ’தார்’ என்ற மந்திர நகரை நோக்கிய ஒரு கணவன் - மனைவியின் தொடர் பயணத்தை விவரிக்கும் படமான இதில் கவனிக்கப்படவேண்டிய சங்கதிகள் இரண்டு: ஒன்று அந்த மனைவிக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் கிடையாது. இரண்டாவது, அந்த தார் என்ற மந்திர நகரம் நாம் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் ஒரு இடம். அந்த தம்பதியினர் ஏன் அந்த மந்திர நகரத்தை நோக்கி பயணித்தனர் என்பதை யூகிப்பதில் இனி சிரமம் இருக்காது அல்லவா?

இந்த படம் மெக்சிகோவின் அகபுல்கோ திரைப்படவிழாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டபோது, மக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்படம் உடனடியாக தடை செய்யப்பட்டது. அப்போது “ரோஸ்மேரிஸ் பேபி” என்ற தன்னுடைய படத்தை திரையிட வந்திருந்த பிரபல இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இதனைக் கண்டித்தார். ஆனால், அவருக்கு அப்போது தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அலேஹாந்ரோவின் அடுத்தடுத்த படங்களுக்கும் இந்த ஆர்ப்பாட்டமும், தடைவிதிப்பும் தொடரும் என்பதுதான்.

el topoஎல் டோபோ (1970): நிர்வாணமான இளம் மகனுடன் குதிரையில் வரும் கருப்பு உடையணிந்த ஒரு மனிதன், ஒரு சிறுநகரில் கொலைத்தாண்டவம் ஆடிய ஒரு குழுவை தேடிப்பிடித்து கொல்கிறான். இவனது துப்பாக்கி சுடும் திறனை கண்டுவியந்த மாரா என்ற பெண், ”நீ மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாக வேண்டுமென்றால், நான்கு வீரர்களை துப்பாக்கிச் சண்டையில் கொல்லவேண்டும்” என்று சொல்கிறாள். தன்னுடைய மகனை அங்கிருக்கும் துறவிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மாராவுடன் புதிய இலக்கை நோக்கி செல்கிறான் அந்த மனிதன்.

வெவ்வேறான மத மற்றும் தத்துவங்களின் குறியீடாக இருக்கும் அந்த நால்வரையும் அதிர்ஷ்டம் மற்றும் தந்திரத்தால் கொல்கிறான், அந்த மனிதன். முதல் வீரனைக் கொல்லும்போது, ஆண் குரலில் பேசும் கருப்பு உடையுடுத்திய புதிரான பெண் ஒருத்தி தோன்றி இவனை மற்ற வீரர்களிடம் வழிநடத்தி செல்கிறாள். ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் தன்னுடைய இந்த கொலைப்பயணத்தை பற்றி சந்தேகிக்கும் இவனை, மாரா சமாதானப்படுத்துகிறாள். நால்வரையும் கொன்ற பிறகு குற்ற உணர்வு மேலோங்கிய நிலையில், அவர்களது சமாதிக்கு சென்று பார்க்கையில் அந்த புதிர்ப்பெண் இவனை சுட்டு, ஏசு சிலுவையில் அறையப்பட்டதைப்போல காயங்களை ஏற்படுத்துகிறாள். மாரா இந்த புதிர்பெண்ணுடன் சேர்ந்துக்கொண்டு இவனைக் கைவிட, இவன் தரையில் வீழ்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.

இரண்டாம் பாகத்தில் இவன் கண்விழிக்கும்போது அங்கஹீனர்கள் மற்றும் குள்ளர்களால் காப்பாற்றப்பட்டு, அவர்கள் குகையில் ஒரு கடவுளைப்போல தான் நடத்துவதைக் காண்கிறான். இவர்களை இங்கிருந்து காப்பாற்றி, வெளியேற்ற முடிவெடுக்கிறான். ஒரு பெண்ணுடன் வெளியேறி அருகிலுள்ள நகரை வந்தடைகிறான். வக்கிரமான ஒரு வழிபாட்டு மரபைப் பின்பற்றும் அந்நகர மக்களிடம் சேவகனாக பணிபுரிந்து, குகையை வெடிவைத்து தகர்க்க டைனமைட் வாங்க, பணம் சேர்க்கிறான். அப்போது அங்கே புதிய பாதிரியாராக வரும் இவரது மகன் ஹைஜோ, இவரை அடையாளம் கண்டுகொள்கிறார். உடனே இவரை கொல்லத்துடிக்க, இவர் தனது புதிய லட்சியத்தை சொல்கிறார். அதை முடிக்கும்வரை கொல்வதை ஒத்திவைத்து, இவருடன் இணைந்து பணியாற்றி, இவரது மனமாற்றத்தை புரிந்துகொள்கிறான் அவரது மகனான ஹைஜோ.

Alejandro Jodorowsky Film El Topo Posterஒருவழியாக அந்த குள்ளர்களை குகையில் இருந்து வெளியேற்றும்போது, இந்த வக்கிரகுணம் கொண்ட நகர மக்கள் அவர்களை சுட்டுக்கொல்வதைக் கண்டு துடித்துப்போகிறார், அந்த மனிதர். காயமுற்ற நிலையிலும் அந்த நகர மக்களை அழித்துவிட்டு, தன்னை தீக்கிரையாக்கிக்கொள்கிறார். அவர் மரணித்த அதே வேளையில் அவனது மனைவியான அந்த பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். படம் முடியும்போது ஹைஜோ இவனது கருப்பு உடையை அணிந்து, இவனது மனைவி, குழந்தையுடன் குதிரையில் பயணிக்கிறார்கள். இரண்டு மணிநேரம் ஓடும் இத்திரைப்படம் அலேஹாந்ரோவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது எனலாம். ஒரு மனிதனின் வாழ்க்கையை இரண்டு பாகங்களாக பிரித்த இந்த படம், கிருத்தவ மத அடையாளங்களையும், ஏனைய மத உருவகங்களையும் கொண்ட ஒரு காவியமாக கருதப்படுகிறது. இந்த ஒரு படத்தில் இருக்கும் குறியீடுகளை மட்டுமே கொண்டு, மிஷ்கின் பத்து படம் எடுக்கலாம்.

இந்த படம் வரலாற்று அளவில் இரண்டு விஷயங்களை உள்ளடக்கியது. வழக்கமான வன்மேற்கு படங்களின் கருத்தியபில்புக்கு நேர்மாறான ”ஆசிட் வெஸ்டர்ன்” பாணி படங்களில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதைப்போலவே, அமெரிக்காவின் கலாச்சார அடையாளமாக கருதப்பட்ட ”நள்ளிரவு திரைப்படங்கள்” (Mid Night Movies) வரிசையைப் பிரபலப்படுத்தியதும் இதுவே. 1970களில் அமெரிக்காவில் ”சில” திரைப்படங்களை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சியாக வெளியிடுவார்கள்.

மெக்சிகோவில் திரையிடப்பட்டால், பிரச்சினை உருவாகும் என்பதால், முறையாக சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல், சிறப்புத் திரையிடல்கள் மூலமாக மட்டுமே இந்தப் படம் பரவலாகப் பேசப்பட்டது. ’எல்ஜின்’ தியேட்டர் அதிபரான பென், அப்படி ஒரு சிறப்புத் திரையிடலில் இதைப்பார்த்து விட்டு. இத்திரைப்படத்தை நள்ளிரவு 12 மணிக்காட்சியில் அமெரிக்காவில் அவரது தியேட்டரில் வெளியிட்டார். அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, 200 நாட்களைத் தொட்ட இத்திரைப்படத்தை, மூன்று முறை பார்த்தார், பிரபல இசைக்கலைஞர் ஜான் லென்னான். இத்திரைப்படத்தை தனது பீட்டில்ஸ் இசைத்தட்டு நிறுவனத் தலைவர் ஆலன் க்ளெய்ன் மூலமாக அமெரிக்கா முழுவதும் முறைப்படி வினியோகம் செய்து வெளியிட வைத்தார்.

த ஹோலி மவுண்ட்டன் (1973): ஆலன் க்ளெய்னே இவருடைய அடுத்த படத்துக்கும் தயாரிப்பாளரானார். Alejandro Jodorowsky FilmThe Holy Mountain Posterஇயேசு கிறிஸ்துவைப் போல தோற்றமளிக்கும் ஒரு திருடன், ஏழு கிரகங்களைக் குறியீடாக உணர்த்தும் எழுவர், தங்கத்தை உருவாக்கும் ஒரு இரசவாதி, மனிதர்களின் ஆன்மீக மறுபிறப்பு, மரணமில்லாத பெருவாழ்வை அளிக்கவல்ல ஆன்மீக மலையை தேடிய ஒரு பயணம் என்று அலேஹாந்ரோ கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் காட்சிப்படுத்தி, இதுவே அவரது மிகச்சிறந்த படம் என்பதில் இருவேறு கருத்தில்லாமல் செய்துவிட்டார்.

அடுத்த பத்திக்கு செல்லும் முன், ப்ளாஷ்பேக்கில் ஒரு விஷயம். மெக்சிகோவுக்கு இவர் வந்த புதிதில் ஈஜோ டகாடா என்ற ஜென் புத்த துறவியிடம் நட்பு கொண்டார் அலேஹாந்ரோ. டகாடாவின் உத்தரவின்படி ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் பெண்மையைப் புரிந்துகொள்ள, பிரபல பெண் எழுத்தாளரான லியோனோரோ காரிங்டனுடன் நட்பு கொண்டார். இதன்பிறகு, பெண்களுக்கு உரிய மரியாதையை முழுமையாக புரிந்துகொண்டார் அலேஹாந்ரோ.

oஹோலி மவுண்ட்டனின் வெற்றிக்குப் பிறகு, க்ளெய்ன் அந்த காலகட்டத்தில் பிரபலமாக விவாதிக்கப்பட்ட ஓ” வின் கதையை திரைப்படமாக்க விரும்பினார். இதையும் அலேஹாந்ரோவே இயக்கவேண்டும் என்றும் விரும்பினார். ஆனால், மேற்கூறிய சம்பவத்திற்குப் பிறகு, பெண்ணியவாதியாக மாறியிருந்த அலேஹாந்ரோ, பெண் உடல் சித்திரவதைகளை மையப்பொருளாக கொண்ட கதையைப் படமாக இயக்க மறுத்துவிட்டு, அமெரிக்காவை விட்டே வெளியேறிவிட்டார். கோபமுற்ற க்ளெய்ன், இவரது ஆகச்சிறந்த படங்களான எல் டோபோ மற்றும் ஹோலி மவுண்ட்டனை திரையிடாமல், மற்ற திரைப்பட உரிமைகளை யாருக்கும் கொடுக்காமல், முப்பதாண்டுகள் இவரை இருட்டடிப்பு செய்துவிட்டார்.

இந்த காலகட்டத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது. அலேஹோந்ரோ ஒரு ஓவியர் என்பதையும், மெக்சிகோவில் அவர் தங்கியிருந்த இடைப்பட்ட காலத்தில், அவர் ஓவியம் வரைந்து ஒரு காமிக்ஸ் தொடர் வந்தது என்பதையும் இதுவரை நீங்கள் படிக்கவில்லை. ஆனால், இப்போது அமெரிக்காவைவிட்டு வெளியேறி ஃப்ரான்ஸ் சென்றடைந்தபோது இந்த ப்ளாஷ்பேக் தேவைப்படுகிறது. ஆகவே 1975ஆம் ஆண்டு ஒரு ஐந்து பாக காமிக்ஸ் தொடருக்கு அலேஹாந்ரோ ஓவியராக இருந்ததை இங்கே சொல்லிவிட்டு தொடருவோம்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu poster designஓ’வின் கதையை படமாக்க விருப்பமில்லாமல், ஃப்ரான்சுக்கு திரும்பி வந்த அலேஹாந்ரோ, மறுபடியும் ஓவியம் வரைய ஆரம்பித்தார். ஆனால், ஒரு ஓவியமேதை வரைவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, அவர் ஓவியங்கள் வரைவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டார். அந்த ஓவியமேதைக்காக கதைகளை எழுதி, அவரையே ஓவியராகக் கொண்டு ஒரு காமிக்ஸ் தொடரையும் ஆரம்பித்தார். அந்த மேதையின் பெயர் மோபியஸ். இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பித்த அந்த தொடரை ஆலன்மூர் போன்ற ஜாம்பவான்கள் “உலகின் தலைசிறந்த காமிக்ஸ் கதை” என்று போற்றுகிறார்கள். அந்த தொடரின் பெயர் இன்கால். (இந்த கதையின் சாரம்சத்தை கொண்டு பிரபல இயக்குனர் லூக் பெஸ்ஸான் எடுத்த படம்தான் ஃபிப்த் எலமெண்ட்).

இப்படியாக ஒரு சினிமா இயக்குநராக பெயரெடுத்த அலேஹாந்ரோ, ஐரோப்பாவில் விற்பனையில் சாதனை புரியும் காமிக்ஸ் தொடருக்கு கதாசிரியராக மறுஜென்மம் எடுத்தார். இதன்பிறகு, இவர் தொடர்ந்து மோபியசுடன் இணைந்து பணியாற்றினார். மோபியசின் ஓவியங்கள் தமிழிலும் (முத்து காமிக்சில்) கேப்டன் டைகர் தொடரில் வந்துள்ளது. இன்காலுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் இணைந்த காமிக்ஸ் தொடரான மெட்டபாரன்ஸ், அலேஹாந்ரோவின் அடையாளங்களைக் கொண்ட மற்றுமொரு கதை.

ஒரு படைப்பாளியையும், அவரது படைப்புகளையும் வெவ்வேறாகப் பிரித்து பார்க்கச் சொல்வதே சிறப்பான வாசிப்புக்கு உகந்தது. ஆனால், வரையறைகளை அத்துமீறுவதையே பழக்கமாகக் கொண்ட இந்த கலகக்காரனுக்கு இந்த வாசிப்பு முறை சரிப்பட்டு வராது. இவரது படைப்புகளை சரியாக ரசிக்க வேண்டுமெனில், இவரைப்பற்றியும், இவரது இயக்கத்தைப் பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருத்தல் அவசியம்.

படங்கள், நாவல்கள், கவிதைகள், மற்றும் காமிக்ஸ் என்று அனைத்திலுமே இவரது தொடர் - குறியீடுகளை காணமுடியும். உடல்ரீதியாக குறைபாடு உள்ளவர்கள் நிறைந்த இவரது கதைகளில், அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனதளவில் பாதிக்கப்பட்டு குறைபாடு கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள். இவரது கதைமாந்தர்கள், முறைதவறிய உறவுமுறைகளில் ஈடுபடுவதாக உருவாக்கப்பட்டு இருப்பார்கள். வன்முறையைக் கையாள்வதை ஒரு கலையாக கொண்ட கதாபாத்திரங்களும், நடைமுறை வாழ்க்கையில் சந்திக்க இயலாத வித்தியாசமான குணாதிசயங்களை கொண்ட வில்லனின் அடியாட்களும் இவரது கதைகளில் அடிக்கடி தென்படுவார்கள். அதைப்போலவே மத மற்றும் இனங்களைப் பற்றிய விமர்சனங்கள் கொண்ட கதைமாந்தர்களும் நிறைந்த கதைகள் இவருடையது. இவ்வளவு போதும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அலேஹாந்ரோவின் முதல் கதையான பௌன்சர் கதைக்குள் நாம் நுழைவதற்கு.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Covers

பௌன்சர் (அலேஹாந்ரோ, போக் – 2001)

மதுபான அரங்குகளில் பிரச்சினை உருவாவதைத் தடுக்க பணிக்கு அமர்த்தப்படும் நபரே பௌன்சர் என்று அழைக்கப்படுவார்கள். பொதுவாக பௌன்சராக இருப்பவர்கள், உடல் பலமும், உள்ள உறுதியும் மிக்கவர்களாகவே இருப்பார்கள். ஆனால், நம்முடைய அலேஹாந்ரோவின் கதையில் பௌன்சராக வருபவர், ஒரு கையை இழந்தவர். இந்த ஒரு அறிமுகமே இவரது குறியீடுதானே? வன்மேற்கு கதைகளில் காணப்படும் வழக்கமான ஜனரஞ்சகமான கதை அமைப்பை மாற்றி ஆசிட் வெஸ்டர்ன் எனப்படும் பாணியை எழுபதுகளில் மறுபடியும் பிரபலப்படுத்தியவர் இவர் என்பதை ஏற்கனவே இந்த கட்டுரையின் 19ஆவது பத்தியில் சொல்லி இருக்கிறோம் அல்லவா? அதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த பௌன்சர் கதையைப் படிக்கவேண்டும். ஏனென்றால், திரைப்படத்தில் இவர் செய்த அதே யுத்தியைத்தான் இப்போது காமிக்ஸ் கதையிலும் உட்புகுத்தியுள்ளார்.

கதையைப் பொறுத்த அளவில், இது நேரியல் அல்லாத பாணியில் (Non Linear), முன்கதைகளை சரியான இடத்தில் புகுத்தி, ஒரு சாதாரண கதையை சுவாரசியமான கதையாக மாற்றும் திரைக்கதை யுக்தியே. ஆனாலும்கூட இந்த பாணிக்கதைகளில் தனது முத்திரையாக, கதையை, எந்தவிதமான அறிமுகமும் இல்லாமல், நடுவில் இருந்து ஆரம்பித்து, பின்னர் தேவைப்படும் ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்கதைகளை அழகாகச் சொல்லி, கதையை வேகமாக நகர்த்தி, விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார், அலேஹாந்ரோ.

Lion Comics Issue No 244 Issue Dated Jan 2015 Alexander Jodorowsky Bouncer Tamil Page No 13தனது பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க பௌன்சரிடம் உதவிகேட்டு வருகிறான், ஒரு பதின்ம வயது இளைஞன். தான் உதவிகேட்டு போனது தனது சித்தப்பாவிடம் என்று அதன்பிறகுதான் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தான் கொல்லத்துடிப்பது தனது பெரியப்பாவையே என்றும். சகோதரர்கள் மூவரும் பிரிய காரணமாக இருந்த அந்த துன்பியல் நிகழ்வு, ஒரு வைரத்தையும், மர்மத்தையும் ஒருங்கே கொண்டது என்றும் தெரியவருகிறது. அதன் பின்னர், பௌன்சர் அவருடைய ஒரு கையை இழந்த முன்கதையை கேட்டுத் தெரிந்துகொண்டு, அவரிடமே துப்பாக்கியால் சுட பயிற்சி எடுத்துக்கொண்டு, பெரியப்பாவை கொல்ல காத்திருக்கையில், அவனுக்கு ஒரு பள்ளி ஆசிரியை மேல் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளது தந்தைதான் தான் கொல்ல நினைத்தவர் என்பதும் தெரியவர, என்ன செய்வது என்பது தெரியாமல் துடிக்கிறான். பௌன்சரின் அறிவுரைப்படி ஒரு திட்டம் இயற்றி, அதன்படி அவன் செயல்படுகிறான். கதையின் முடிவில் மர்மமான அந்த வைரத்தின் மறைவிடம் பற்றிய அலேஹாந்ரோவின் பாணி ட்விஸ்ட் ஒன்றும் உள்ளது.

தமிழ் சினிமாவில் லட்சம் முறை பார்த்து, பார்த்து சலித்துப்போன பழிக்குப்பழி வாங்கும் மிகச்சுமாரான, அரதப்பழசான இந்தக் கதையில் இருக்கும் மூன்று அம்சங்கள் இந்தக் கதையை நமது சமூகத்தின் கற்பனையில் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுசெல்கிறது. மூன்றுமே அந்த பதின்ம வயது இளைஞனுக்கு பயிற்சி அளிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 1A

  1. சேத் என்ற அந்த இளைஞனுக்கு பயிற்சி அளிப்பதற்காக, முதல் கட்டளையாக, இறந்த ஒருவரின் உடலை, துண்டு துண்டாக வெட்டி, இறந்தவரின் நாய்களுக்கே இரையாக்கும் காட்சி. இது மனதை, ஆன்மாவை உரப்படுத்த, ஈவிரக்கமற்ற வேட்டையனாக மாற்ற கொடுக்கப்படும் முதல்நிலை பயிற்சி.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 2A

  1. நள்ளிரவின் குளிர் எப்படி நம் உடலை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்காதோ, அதைப்போலவேத்தான் நம்மையறியாமல் நமக்குள்ளே ஊடுருவியிருக்கும் பயமும். இரண்டாவது காட்சியில் ஒரு லின்க்சை (சிறுத்தை வகையை சேர்ந்த ஒரு மிருகம்) கூண்டில் அடைத்து, அதனருகிலேயே சேத் என்ற அந்த இளைஞனை அமரவைத்து பயத்தை எதிர்கொள்ள வைக்கிறார், பௌன்சர். கிட்டத்தட்ட பேட்மேன் படத்தில் பயத்தை அரவணைக்கும் காட்சிக்கு ஒப்பான இதில், தன்னுடைய அச்சங்களை வெற்றிகொள்வதின் அவசியம் உணர்த்தப்பட்டு இருக்கும்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 3A

  1. மூன்றாவதாக, ஒரு மலைமுகட்டின்மேலே நிற்கவைத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியைக் கொடுப்பார். கவனத்தை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற சின்னஞ்சிறு அசைவுகளை தவிர்த்து, யுத்தத்தில் ஜெயிக்க நிதானமும், பொறுமையும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர். Carpe Diem என்ற ’ஒற்றைநொடியே உன் வாழ்க்கை, அதை முழுவதுமாக வாழ உள்ளுக்குள் ஒரு இலகுவான வெறுமையை உணர’ பயிற்சி அளிக்கிறார், பௌன்சர். ஒரு கட்டத்தில் இலக்கும், சுடுபவனும் ஒன்றே என்ற மகாபாரதக் கோட்பாட்டை உணர்ந்த சேத், தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொள்கிறான்.

இதைத்தவிர, ஏற்கனவே கட்டுரையில் சொன்னமாதிரி, ஏகப்பட்ட குறியீடுகளால் நிரம்பி வழிகிறது, இந்தக் கதை. முதல்முறை வாசிக்கும்போது சாதாரண கண்களுக்கு தட்டுப்படாத இவை, மீள்வாசிப்பின் சுவையை கூட்டும். உதாரணமாக, பெற்றோரை இழப்பது, பயிற்சி எடுப்பது, பழிவாங்குவது என்ற கதையின் மூன்று முக்கிய நிகழ்வுகளும் மழைக்காலம், பனிக்காலம் மற்றும் வசந்த காலத்தில் நடப்பது சாதாரணமாகக் கதையில் வைக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம்தானே?

Lion Comics Issue No 244 Issue Dated Jan 2015 Alexander Jodorowsky Bouncer Tamil Page No 115ஓவியர் போக் ஒரு அசாதாரண படைப்பை நம்மிடையே தந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு துப்பாக்கி வீரனுக்கு சுடும்போது அவனுக்கான உடல் சமநிலை மிகவும் முக்கியம். ஒரு கையை இழந்த ஒருவனுக்கு சமநிலையை உருவாக்க, அவன் எப்போதுமே ஒரு பக்கம் சாய்ந்து, எடையை உடலின் இருபுறமும் இணையாக வைத்திருக்க வேண்டும். மீள்வாசிப்பின்போது பௌன்சரின் உடல்மொழியை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள். அதைப்போலவே, வன்மேற்கின் மூன்று காலங்களையும் மிக அழகாக தன்னுடைய நேர்த்தியான ஓவியங்களால் வெளிப்படுத்தி இருக்கிறார், ஓவியர் போக். இதைத்தவிர இந்தக்கதையில் சிலாகித்துப் பேச, சிறப்பாக ஒன்றும் இல்லை. ஆனால், அலேஹாந்ரோவின் மற்ற காத்திரமான படைப்புகளை எதிர்நோக்க, இது ஒரு முன்மாதிரி என்ற வகையில், பௌன்சர் ஒரு சரியான ஆரம்பமே.

Untitledஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தின் ரசனையை நிர்ணயிப்பது நுகர்வோர் அல்ல, ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்பாளியே என்ற சித்தாந்தத்துக்கு மிகச்சிறந்த உதாரணம், அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி.

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய சுயம்வரம் என்ற மலையாளத்திரைப்படம் வெளியானபோது பிரபல பத்திரிகையின் திரைவிமர்சகர் ஒருவர் “மலையாளத்தின் முதல் திரைப்படம்” என்று எழுதினார். அலங்காரச் சொல்லாடலை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அது ஒரு வரலாற்று உண்மையே. அந்தத் திரைப்படம் எழுபதுகளில் மலையாள திரையுலகில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. உலக அளவுக்கான ஒரு முதல் அடியாக அது கருதப்பட்டது.

கிராபிஃக் நாவலை மொழிபெயர்த்து வெளியிடுவதைப்பொருத்த வரையில், (நிறைய தவறுகள் இருந்தாலுமே) பௌன்சர் தமிழின் முதல் கிராபிஃக் நாவல். என்னுடைய பார்வையில், முதல் முயற்சி.

பௌன்சர் – ரௌத்திரம் பழகு: லயன் காமிக்ஸ் வெளியீடு.

114 பக்கங்கள், ரூ. 125/-

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான தீராநதியில், அறியப்படாத ஆளுமைகள் என்ற தலைப்பில் மிகச்சிறந்த கிராஃபிக் நாவல்களைப் பற்றியும், அவற்றைப் படைத்த ஆளுமைகளைப் பற்றியும் அடியேன் எழுதி வரும் தொடரின் முதல் கட்டுரை இது. ஏப்ரல் 2015ல் ஏழு பக்கங்கள் என்ற அளவில் வெளியான, தமிழின் முதல் காமிக்ஸ் கட்டுரையும் கூட.

Monday, June 05, 2017

5 அறியப்படாத ஆளுமைகள் 1: ஷிகேரு மிசூக்கி (1922 – 2015)

OTOND 0

மாங்கா என்றழைக்கப்படும் ஜப்பானிய சித்திரக்கதைகளின் ஜாம்பவான் என்று கருதப்படுபவர் ஒசாமு தெசூக்கா. இவர் மறைந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றை எழுத, இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அமெரிக்க பதிப்பகமான விஸ் மீடியாவின் எடிட்டர் ஒருவரிடம் சென்ற ஆண்டு உரையாடினேன். அப்போது நான் அவரிடம் ஒசாமு தெசூக்காவிற்கு அடுத்தபடியாக, மாங்கா படைப்பாளிகளில் யார் தலை சிறந்தவர்? என்று வினவினேன். அதற்கு அவர், தற்போது உயிரோடிருக்கும் மாங்கா படைப்பாளிகளிலேயே தலைசிறந்தவர் ஷிகேரு மிசூக்கிதான் என்று சொன்னார். அவருடைய படைப்புகளை தேடுகையில்தான் இதுவரையில் இவரது படைப்புகளில் இரண்டே இரண்டுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. ஆனால், ஜப்பான் நாட்டின் மனசாட்சியின் குரல் என்று அழைக்கப்பட்ட ஷிகேரு மிசூக்கி வெறும் ஒரு காமிக்ஸ் படைப்பாளி மட்டும்தானா என்ன? இந்த கேள்விக்கான பதிலாகவே இந்த கட்டுரை படைக்கப்பட்டுள்ளது.

SM 2இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுகள் வீசப்பட்டு, தரைமட்டமான ஜப்பான் மீது உலகநாடுகள் அனைத்திற்குமே ஒரு கருணை சார்ந்த பார்வை உண்டு. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு முன்பு, ஜப்பானியர்கள் போரில் செய்த அட்டூழியங்களையும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய ராணுவ தளபதிகள் செய்த அராஜகங்களையும் இவர் காமிக்ஸ் (மாங்கா) வடிவில் படைத்தார். தன்னுடைய கறைபடிந்த பழைய வரலாற்றை மறைக்க நினைத்த ஜப்பானிய சமூகத்திற்கும், வரலாறே தெரியாத புதிய தலைமுறைக்கும் இவரது படைப்புகள் சாட்டையடி போல இருந்தது என்றால், அது மிகையல்ல. ஆனால், அதற்காக இவர் அரசாங்கத்தால் தண்டிக்கப்படவில்லை. மாறாக, இவரது ஊரில் இருக்கும் மிகப்பெரிய சாலைக்கு இவரது பெயரை சூட்டி கௌரவித்தனர். அந்த சாலை முழுவதுமே இவரது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. யொனாகோ நகரத்திலிருந்து மிசூக்கியின் ஊரான சகாய்மினாட்டோவிற்கு செல்லும் இரயிலின் பெயரே இவரது ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான். அதுமட்டுமல்ல, அந்த இரயில் வண்டி முழுவதுமே இவரது கதாபாத்திரங்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவரை ஒரு கலாச்சார தூதராக, ஜப்பானின் பிரதிநிதியாக, மக்களின் மனசாட்சியாகவே பார்த்த ஜப்பானிய மக்கள், இவருக்கு வெண்கலத்தாலான ஒரு சிலையை வடித்து மரியாதை செலுத்தினர்.

 

ஆனால், இவர் போர் சார்ந்த மாங்கா சித்திரக்கதைகளுக்காக மட்டுமே பிரபலமடையவில்லை. ஜப்பானிய நாட்டுப்புற கதை மரபில் “யோகாய்” என்றொரு வகை உண்டு. நமது தேவதைக்கதைகள், மந்திர மாயாஜாலக் கதைகள் போலவேதான் இவையும். ஆனால், இந்த யோகாய் மரபு கதைகளில் அனைத்துமே அமானுஷ்யமான பேய், பிசாசுக்கள்தான் இருக்கும். இவ்வகையான கதைகளில் பார்வைக்குப் புலப்படாத சில சக்திகள் நமது அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் உயிரினங்கள் மீது ஆட்கொண்டு, அவற்றின் வாயிலாக செயல்படும். இவ்வகையான சக்திகள் வெறுமனே தீயவை ஆக மட்டுமில்லாமல், நன்மை பயப்பவையாகவும், குறும்புக்கார வகையாகவும் படைக்கப்பட்டு இருக்கும்.

SM 3

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். நமது ஊரில் மழை பெய்து கொண்டிருக்கும்போது வெயிலும் அடித்தால், அப்போது கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடப்பதாகச் சொல்வார்கள் அல்லவா? ஆனால், யோகாய் பாணியில், அது நரிகளுக்கிடையிலான திருமணத்தை உணர்த்துவதாக சொல்லப்பட்டு இருக்கும். இதுபோன்ற பல நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்த, அவற்றை சித்திரக்கதை பாணியில் வெளியிட ஆரம்பித்தார். இவற்றின் சிறப்பம்சம் என்ன என்றால், இவை ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மட்டுமே சார்ந்து எழுதப்படவில்லை என்பதுதான். ஜப்பானிய நாட்டுப்புற கதைகளை மையப்படுத்தி பல கதைகளை மாங்கா வடிவில் வெளியிட்ட இவர், அதன்பின்னர் பல உலகநாடுகளுக்கு பயணம் செய்து, ஆராய்ச்சிகள் செய்து, ஆவணப்படுத்தி, அதை முஜாரா என்ற தலைப்பில் 12 தொகுப்புகளாக வெளியிட்டார். இப்படியாக, நாட்டுப்புற கதைகளை மாங்கா சித்திரக்கதைகளாக்கிய மிசூக்கி, இவ்வகையான பாணி (Genre) படைப்புகளுக்கு என்று ஒரு புது வழியை உருவாக்கினார்.

1922ஆம் ஆண்டு ஒசாகாவில் பிறந்த மிசூக்கி, சகாய்மினாட்டோவில்தான் வளர்ந்தார். மூரா ஷிகேரு என்ற தனது பெயரை இவரால் சிறுவயதில் சரியாக உச்சரிக்க முடியாததால், தன்னைத்தானே ஜீஜி என்றழைக்கத் துவங்கினார். அதுவே அவரது பட்டப்பெயராகவும் நிலைத்துவிட்டது. சிறு வயதில் மிகவும் சோம்பேறியாக இருப்பதைக்கண்ட இவரது தந்தை, இவரை அவரது போக்கிலேயே விட்டுவிட்டார். ஆனால், அப்போதே இவரிடம் இருக்கும் மூன்று வித்தியாசமான குணங்களை அடையாளம் கண்டு கொண்டார்.

  • எதையுமே ஜீரணம் செய்யக்கூடிய ஒரு வயிறு,
  • யாருக்குமே அஞ்சாத ஒரு தீவிர போர்க்குணம் மற்றும்
  • ஓவியம் வரைவதில் இவருக்கு இருந்த அசாதாரண திறமை.

பள்ளிக்கு சென்ற முதல் நாள், இருந்ததிலேயே மிகவும் வலிமையானவனாக காணப்பட்ட மாணவனை வம்புக்கு இழுத்து, அவனை நையப் புடைத்து விட்டார், மிசூக்கி. மேலும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பந்திற்கு தங்க வர்ணம் பூசப்பட்டு இருக்க, பார்க்க அழகாக இருக்கிறது என்று அதை சாப்பிட்டவரும் இவரே.

2

ஜெர்மானிய ஓவியர் ஆல்பெர்க்ட் யூரரின் ரசிகரான மிசூக்கியின் ஓவிய பாணியானது உலக அளவில் இருக்கும் விமர்சகர்களை சிக்கலில் வைத்த ஒன்றாகும். ஏனென்றால், இவரது பாணி ஓவியங்கள் மிகவும் தனித்தன்மையுடன், ஒப்பிட்டுப் பார்க்க வேறு யாருமே இல்லாத ஒரு நவீன பாணியில் வரையபட்டவை. கதாபாத்திரங்களை ஜப்பானிய மாங்கா மரபுப்படியும், பின்புலத்தில் இருக்கும் காட்சிகளை அழகியல் மரபுப்படியும் வரைந்து ஒரு புதுவிதமான ஓவியப்பாணியை உருவாக்கியவர், மிசூக்கி.

மிசூக்கியின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்களிப்பு செய்தவர் அவரது குடும்பத்திற்காக பணிபுரிந்த ஃப்யூஸா க்கேயாமா என்ற பாட்டிதான். மிசூக்கியின் சிறுவயதில் இவர்தான் இரவினில் பலவிதமாக நாட்டுப்புற கதைகளை சொல்லி, பல அரிய விஷயங்களை இவருக்கு தெரியவைத்தவர். பின்னாளில், தனது கதைகளில் இவரையே மையப்படுத்தி “நோன் நோன்பா” என்ற மாங்கா கதைத்தொடரை எழுதினார் மிசூக்கி.

1

இப்படியாக பொழுதைப்போக்கிக்கொண்டிருந்த மிசூக்கியை, வேலைக்கு ஆகாதவர் என்று அவரது குடும்பம் முடிவெடுத்து இருந்த நிலையில்தான் அவர் ராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். தனது 20ஆவது வயதில் ராணுவத்தில் சேர்ந்த இவர், இவரது ராணுவ அனுபவங்களை இரண்டு மாங்கா காமிக்ஸ் தொடராக எழுதியுள்ளார். இவை இரண்டுமே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அமெரிக்காவின் தலைசிறந்த விருதான ஐஸ்னர் விருதைப் பெற்றுத் தந்தன. அந்த இரண்டு மாங்கா சித்திரக் கதைகளுள் ஒன்றுதான் Onwards Towards Our Noble Death (மெச்சத் தகுந்த மரணத்தை நோக்கிய எங்கள் பயணம்) OTOND. 1973ஆம் ஆண்டு ஜப்பானில் வெளியான இந்த மாங்கா, சமீபத்தில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

OTOND 0மெச்சத் தகுந்த மரணத்தை நோக்கிய எங்களது பயணம்: 20 வயதே ஆன மரூயாமா என்ற போர்வீரனின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த மாங்கா, ஏறக்குறைய மிசூக்கியின் போர்க்கால வாழ்க்கை வரலாறுதான். ஒருசில இடங்களில் மட்டும், கதையின் ஓட்டத்திற்காக சில சம்பவங்களை மிகைப்படுத்தி எழுதி இருந்தாலும், ஜப்பானிய போர் வீரர்களின் துயரத்தை, சோதனைகளை மிகவும் அழகாக சித்தரித்த தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அமெரிக்கா, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் தலைசிறந்த விருதுகளை பெற்ற இந்த மாங்கா, 2007ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வெளியானது.

நியூ பிரிட்டன் என்றழைக்கப்பட்ட பாப்புவா நியூ கினியாவின் ரபௌல் என்ற தீவில்தான் கதை நடைபெறுகிறது. 27 வயதேயான லெஃப்டெனன்ட் கர்னல் டடோகோரோ என்ற ஆதிக்க வெறி பிடித்த, ஒன்றுமே தெரியாத தலைமை அதிகாரியின் கீழ் இயங்கும் ஒரு படை, ரபௌல் தீவில் நுழையும்போதுதான் கதையும் துவங்குகிறது.

அந்த தீவைக் கைப்பற்ற நுழையும் ஜப்பானிய வீரர்களுக்கு, எதிர்ப்பு எதுவுமே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. புறவுருவம் சார்ந்த பாணியில் (சிலுவெட் Silhouette) பாணியில் வரையப்பட்டு இருக்கும் இந்த ஆரம்பப் பக்கங்களே நாம் படித்துகொண்டிருப்பது ஒரு மேதையின் படைப்பு என்பதை அழகாகத் தெரிவிக்கிறது.

OTOND 2

அழகியலின் உச்சமாக இருக்கும் அந்த தீவைப் பார்த்த வீரர்கள், கிட்டத்தட்ட சொர்க்கம் போலவே இருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனே கதாசிரியரின் கருத்தும் வெளிப்படுகிறது (உண்மையில் நீங்கள் சொர்க்கத்திற்கு தொலைவில் எல்லாம் இல்லை, மிகவும் நெருக்கத்திலேயே இருக்கிறீர்கள்). இரண்டாம் உலகப்போருக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு ஜப்பானிய ராணுவ வீரனுக்கும், அந்த அழைப்பு ஏறக்குறைய மரணத்தின் அழைப்பே என்று கூறப்பட்டதை மிகவும் அழகாக ஒரே ஒரு ஓவியத்தில் விளக்கியதோடில்லாமல், அந்த வீரர்கள் அனைவரின் மரணமும் மிகவும் நெருக்கத்தில்தான் உள்ளது என்பதையும் உணர்த்திவிட்டார் மிசூக்கி.

இதன்பிறகு நடைபெறும் பல சம்பவங்கள் Dark Humour வகையைச் சார்ந்தவை. படிப்பவர்களுக்கு சில நேரங்களில் அவை நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், அவைதான் அங்கே நிதர்சன உண்மையின் கோர முகம். உதாரணமாக அந்த ரபௌல் தீவில் முதல் ஜப்பானிய வீரனின் மரணம் அமெரிக்க வீரனின் துப்பாக்கியாலோ, அல்லது போரினாலோ அல்ல. மாறாக, மலேரியா மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவனது உடல்நிலையின் தாங்கும் சக்தியின் அவலத்தை விளக்குவதாகும். ஆமாம், மரத்தை வெட்டி, அவற்றை தூக்கிக் கொண்டு வரும் ஒரு வீரன் ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்டு வந்ததால், சோர்வுற்று, அவன் தூக்கி வந்த மரத்தினாலேயே நசுக்கப்பட்டு இறந்து விடுகிறான். மற்றொரு வீரன் ஆற்றைக் கடக்கையில் முதலையால் தாக்கப்பட்டு இறக்க, மூன்றாவது வீரன் பசியினால் நொந்து இருக்கும்போது, ஒரு பெரிய மீனைப்பிடித்து, அதை சாப்பிடும் ஆர்வத்தில், மீன் தொண்டையில் சிக்கி இறக்கிறான்.

OTOND 4

இதுமட்டுமல்ல, அனுபவமற்ற தளபதி, அவனது தண்டனைகள் மற்றும் தண்டிக்கும் முறைகள், சிறிதுகூட ஓய்வெடுக்க அனுமதிக்காத ராணுவ வழிமுறைகள் என்று பலவற்றையும் கதையின் போக்கில் படம்பிடித்து காட்டுகிறார், மிசூக்கி. இந்த மாங்காவின் சிறப்பம்சம் என்னவென்றால், தனித்தன்மையுடன் கூடிய ஓவிய முறையும், கதை சொல்லப்பட்ட விதமும்தான். குறிப்பிட்ட சில வீரர்களைத்தவிர, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனத்தையும், கதையின் ஓட்டம் தொடர்ச்சியாக இல்லாமல், அடிக்கடி அடுத்த நிலைக்கு தாவுகிறது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், ராணுவ மற்றும் போர் சார்ந்த அரசியலின் கோரமுகத்தை நமக்கு காட்டும் மிக முக்கியமான ஆவணம் இது என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.

ஒரு கட்டத்தில், அமெரிக்க வீரர்களின் பாசறையை ஜப்பானியர்கள் கைப்பற்ற, அங்கே அவர்கள் சாக்லெட், பிஸ்கெட் மற்றும் வகை வகையான உணவுப் பொருட்களை வைத்திருப்பதைக் கண்டு பொறாமையில் “அந்த அமெரிக்க வீரர்கள் ஒரு ராஜாவைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்” என்று சொல்வது மிகை என்றால், அடுத்து நடப்பதுதான் உச்சம். ஒவ்வொரு வீரனும் போதிய உணவில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற தீனி கிடைத்தால் விட்டு விடுவார்களா என்ன? அவற்றை உண்ண போட்டி போடும்போது, வழக்கம் போல தலைமை அதிகாரி வந்து அவற்றை கைப்பற்றி, வீரர்களின் கண் முன்னே சாப்பிடுகிறார். தலைமைக்கும், செயல்வீரர்களுக்கும் இடையே நிலவும் உறவின் நகைமுரணாக படைக்கப் பட்டிருக்கும் இக்காட்சி, இந்த மாங்காவின் உச்சத்தில் ஒன்று. தலைமை அதிகாரி உண்டு, களைப்பான பிறகு மற்ற வீரர்களுக்கும் உணவு கிடைக்க, அதில் ஒருவர் சொல்லும் வசனம், அவர்களின் நிலையை மிக அழகாக படம்போட்டு காட்டியது: ”ஒருவழியாக இதை சாப்பிட்டுவிட்டேன் அல்லவா, இனிமேல் நான் நிம்மதியாக இறப்பேன்” என்று ஒரு ராணுவ வீரன் சொல்வது என்ன ஒரு அவல நிலையை குறிக்கும் காட்சி?

3

அதைப்போலவே பல காட்சிகள் இந்த மாங்காவில் உண்டு. மேலும் ராணுவ யுத்தங்கள் அனைத்தும் சினிமாவில் நாம் பார்ப்பது போல இல்லை என்பதையும் மிக அழகாக உணர்த்தியது இந்த சித்திரக்கதை. ஏனென்றால், எதிரியை கண்ணால் பார்க்கவே இயலாதவகையில்தான் யுத்தம் நடக்கிறது. அப்படி இறுதியாக எதிரிகளை பார்க்க நேரிட்டால், அதுவே அவர்கள் இறுதியாக காணும் காட்சியாகவும் அமைந்து விடுகிறது.

ஜப்பானிய ராணுவத்தின் ஆகப்பெரிய அவலத்தை இந்த மாங்காவின் இறுதிப் பகுதி வெளிப்படுத்துகிறது. யுத்தத்தின் ஒரு கட்டத்தில் எதிரிகளின் கை ஓங்கிய நிலையில், அந்தத் தீவை விட்டு வெளியேறலாம் என்று ஆலோசனை வழங்கப்பட, கௌரவமே பெரிது என்று பேசும் அனுபவமற்ற கர்னல், தற்கொலைத் தாக்குதலுக்கு உத்தரவிடுகிறார். 500 பேரைக் கொண்டதாக அத்தீவில் வந்திறங்கிய படை, அவர்களது கடைசி இரவை கொண்டாட்டத்தின் உச்சமாக கழிக்கின்றனர். துப்பாக்கிக் குண்டுகள் இவர்களது பெயரைத்தாங்கி காத்திருக்க, மரணத்தை நோக்கிய இவர்களது பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால், அந்த தற்கொலைத் தாக்குதலில் அனைவருமே இறந்து விடவில்லை. 80 வீரர்கள் தப்பிப் பிழைத்து, தங்களது ராணுவ நிலையத்தை அணுக, கீர்த்தியே பெரிது, கௌரவமே முக்கியம் என்று கருதப்படும் ஒரு அனுபவமற்ற ராணுவ அதிகாரி, இவர்கள் அனைவருமே அந்த தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டதாக ராணுவ தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி விட்டது தெரிய வருகிறது. உண்மையை தலைமை நிலையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து, மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களை மறுபடியும் போருக்கு அனுப்பி அவர்களது மரணத்தை நிச்சயம் செய்கிறார்.

OTOND 5

மரூயாமா என்ற வீரனது பார்வையில் சொல்லப்பட்ட இந்த மாங்கா கதையின் முடிவு, ஒரு குரூரமான ராணுவ நிலைப்பாட்டை விளக்கும் கவிதைத்தனமான காட்சி ஆகும். மரூயாமாதான் அந்தப் பிரிவில் கடைசியாக உயிரிழக்கும் வீரன்.

இந்த மாங்கா கதையில் சொல்லப்பட்டு இருப்பதில் 90 விழுக்காடு உண்மையே என்று சொல்லும் கதாசிரியர், அடுத்து சில விஷயங்களை எழுதி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும். ஆனால், ரபௌல் என்ற தீவில் மட்டுமே நடப்பதாக கதை எழுதப்பட்டு இருப்பதால், அத்துடனேயே முடித்துக்கொள்கிறார் மிசூக்கி.

ஏன் இந்த தீவில் (மட்டுமே) நடப்பதாக கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது? என்ற கேள்வி எழாமல் இல்லை. தீவு என்பது நான்குபுறமும் சூழப்பட்டு, தப்ப வழியே இல்லாத ஒரு இடத்தை குறிப்பதைப்போல, இந்தக் கதையில் இருக்கும் வீரர்களும் தப்பிக்க வழியே இல்லாத ஒரு சூழலில் இருப்பதை உணர்த்தும் ஒரு உருவகமாகவே இதைப் பார்க்கவேண்டும். ஓவியங்கள் முதற்கொண்டு, கதைக்களன் வரையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறியீடுகளை வைத்து, சொல்ல வந்த கருத்தையும், போரின் அவலத்தையும் சுட்டிக்காட்டிய இந்த மாங்கா, போருக்கு எதிரான புத்தகங்களில் தலையாய ஒன்றாக மதிப்பிடப்படுவதில் தவறே இல்லை.

OTOND 3

கதையும், உண்மையும்: இந்த கதையின் முடிவில் உண்மையிலேயே உயிர் பிழைக்கும் வீரர்தான் ஷிகேரு மிசூக்கி. அதன் பின்னர் பாப்புவா நியூ கினியாவின் பழங்குடியினரால் காப்பாற்றப்பட்ட இவர், கடுமையான மலேரியா காய்ச்சலில் இருக்கும்போது வீசப்பட்ட ஒரு குண்டின் விளைவாக தனது ஒரு கையை இழக்கிறார் என்பதுதான் இந்தக் கதையின் கோரமான முடிவு (அவரது கையை துண்டித்து எடுக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல், ஒரு பல் மருத்துவர் அதை செய்து முடிக்கிறார் என்பதும் ஒரு நகைமுரணே).

SM 1இதன்பிறகு, அந்த பழங்குடியினரின் அன்பினால் கட்டுண்டு, அந்த ரபௌல் தீவிலேயே தங்க முடிவெடுக்கிறார் மிசூக்கி. ஆனால், வெட்டியெடுக்கப்பட்ட அவரது கையை மருத்துவம் செய்யவும், அவரது காய்ச்சலுக்கும் அங்கே போதிய மருத்துவ வசதி இல்லாததால், அவர் ஜப்பானுக்கு கட்டாயமாக அனுப்பிவைக்கப்படுகிறார். பத்து வருடங்கள் பல வேலைகளை செய்த இவர், தனது 33ஆவது வயதில் முதன்முறையாக ஓவியங்களின் வழியே கதை சொல்லும் பாணிக்கு வருகிறார்.

தனது கதை சொல்லும் பாணியிலும் இவர் பல புதுமைகளை செய்துள்ளார். ஏற்கனவே சொன்னதுபோல, அமானுஷ்ய சக்திகளை மையமாக கொண்ட மாங்கா கதைகளை படைத்த இவர், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விமர்சிக்கவும் தவறவில்லை. ஹிட்லரை மையாக வைத்து ஒரு மாங்கா, வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் நேர்மையற்ற செயல்களைப் பற்றிய விமர்சனம் கொண்ட ஒரு மாங்கா, மர்லின் மன்ரோவை அதீத சக்திகளைக் கொண்ட ஒரு மந்திரவாதியாக கொண்ட ஒரு மாங்கா என்று பல வித்தியாசமான படைப்புகளை கொடுத்திருந்தாலும், இவரது தலையாய படைப்புகள் அனைத்துமே யோகாய் வகையைச் சார்ந்ததே.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டோரோ என்ற கதைவரிசையை சொல்ல வேண்டும். கிட்டோரோ என்ற சிறுவனின் பெற்றோர்கள், ஒரு மாந்திரீக வம்சாவழியினரை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே இறந்துவிட, கிட்டோரோ மட்டும் தனித்து விடப்படுகிறான். அவனது தந்தையின் ஒரு கண் மட்டும் அவனுக்கு பாதுகாவலனாக வருகிறது. கண் என்றால், வெறும் கண் மட்டும் இல்லை. அந்த கண்ணிற்கு என்று கை கால் எல்லாம் உண்டு. இப்படியாக அதீத கற்பனையுடன் படைக்கப்பட்ட இந்த மாங்கா தொடர், ஜப்பானிய மக்களால் மிகவும் விரும்பப் பட்ட தொடர்களில் ஒன்று.

Kumudam TheeraNathi Jan 2015 Credits 1கடந்த நவம்பர் 30ஆம் தேதி தனது 93ஆவது வயதில் மரணமடைந்தார் மிசூக்கி. அவரது மகள்கள் இருவராலுமே அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் முடியவில்லை. மரணத்தை பலமுறை நேரில் சந்தித்து மீண்டவர் என்பதால், அவரை ஒரு சிரஞ்சீவி என்றே பலரும் நினைத்திருந்தார்கள். தனது கடைசி காலம் வரையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாமேதைக்கு நமது மனமார்ந்த அஞ்சலி.

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான குமுதம் தீராநதியில் அடியேன் எழுதி வரும் தொடரான அறியப்படாத ஆளுமைகள் என்ற தொடரின் ஒரு அத்தியாயம் தான் ஷிகேரு மிசூக்கியைப் பற்றியது. நன்று, குமுதம் தீராநதி.

Monday, May 22, 2017

0 The Good Dog ஆங்கில கிராபிஃக் நாவல் அறிமுகம்

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics Cover1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய முதல் காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களிடையே பெரிதளவில் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே கதாசிரியரின் அடுத்த படைப்பான The Big Wheels வெளியானபோது, அமெரிக்காவே இவரை திரும்பப் பார்த்தது. ஆனால், தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல், திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி, தனக்கு பிடித்தமான உடல் ஓவியங்களை வரையச் (Tattoos)  சென்று விட்டார்.

அடுத்து பல ஆண்டுகளில், காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால், அதன் மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரைத் திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?

Graham Chaffeeஅப்படிப்பட்ட ஒரு கதையுடன் திரும்ப வந்து அசத்தி இருக்கிறார்,. கிரகம் சாஃபி. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசிக்கும் இவரது லேட்டஸ்ட் கிராபிஃக் நாவலின் பெயர் The Good Dog. கதைக்கேற்றபடியே முழுக்க முழுக்க நாய்களையே பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைதான் இது.

அடிக்கடி கொடுங்கனாக்களால் பாதிப்புக்கு உள்ளாகும் இவான் என்ற தெரு நாய்தான் நமது கதையின் நாயகன். ஒரு குழந்தையை காரில் அடிபடுவதில் இருந்து காப்பாற்றி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் திட்டு வாங்குவதில் இருந்து ஆரம்பித்து, தாகம் காரணமாக கோழிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நீரை குடிக்க, அதனால் கோழிகள் பயத்தில் கத்த, அங்கிருந்து பிக்னிக்கில் இளம் ஜோடியிடம் கொஞ்சப்படுவது, மரத்தில் கயிற்றில் பின்னிக்கொண்டு சிக்கலில் இருக்கும் கிர்பி என்ற நண்பனை விடுவிப்பது, பின்னர் ஒரு வேட்டை நாய் கும்பலுடன் இணைவது, அவர்களை பற்றித் தெரிந்துகொள்வது, அன்றிரவு அவர்களுடன் வேட்டைக்கு செல்வது, வேட்டையில் தலைவன் கொல்லப்படுவது, பிறகு அந்த கும்பலில் இருந்து பிரிவது என்று கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics There is a Place for every dog

பின்னர் வேட்டைக்கு சென்ற அதே வீட்டின் கோழி வெளியே சுற்றும்போது அதனை வீட்டுக்கு திரும்ப அழைத்து செல்கிறது, இவான். ஆனால், அந்த வீட்டு பெண் இவானிடம் பேச முற்படும்போது பயந்து ஓடிவிடுகிறது. அவள் மற்றவர்களிடம் இதை சொல்கிறாள். அப்போது ரே என்பவர் “நீ ஏன் அந்த நாய்க்கு ஒரு கடிதம் எழுதக்கூடாது?” என்று கேட்கிறார். முதலில் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அவர் கடிதத்தை மிகவும் எளிமையாக எழுதும்படியும் சொல்கிறார். அதன்படி அவள் ஒரு குறியீட்டுடன் தண்ணீர் குவளையை வைக்க, இவான் அதில் தண்ணீர் பருகிவிட்டு அந்த குறியீட்டின்படி அங்கேயே அமர்ந்திருக்கிறது. அப்போது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாய் மறுபடியும் வர, இவான் அந்த நாயை பின் தொடர்ந்து செல்கிறதா? அல்லது அங்கேயே தங்கிவிடுகிறதா? என்பதை சொல்லாமல் முடிவை வாசகர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறார் கதாசிரியர்.

கதையில் பல இடங்களில் வசனங்கள் மிகவும் முக்கியமானதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக

  • ஒவ்வொரு நாய்க்கு என்றும் ஒரு வசிப்பிடம் அவசியமாகிறது (A Dog needs some place to belong)
  • முதலாளி எப்போதுமே சரி.
  • ஒவ்வொரு நாய்க்கும் அதற்கான இடம் விதிக்கப்பட்டுள்ளது.
  • அது எந்த இடம் என்று கண்டறிவதுதான் அந்த நாயின் வேலை

என்று பல வசனங்களும், மிகவும் எளிய பாணியிலான ஓவியங்களும் கதைக்கு வலுவூட்டுகிறது.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics writing a Letter for the dog

கதையை மேலோட்டமாக படிக்கும்போது இதனை ஒரு சாதாரண நாயின் கதையாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருந்தாலும் இது ஒரு சாதாரண கதை அல்ல. கதையில் இவான் இருக்கும் இடத்தில் நம்மை பொருத்திப்பார்த்தால், இது ஒரு உளவியல்ரீதியிலான சுய பரிசோதனையாகவே படுகிறது. சமூகத்தில் நமக்கான இடம் என்ன? என்பதை நாம் உணரும்வரையில், நாமும் இவானைப்போலவே நிலையில்லாமல், புரிந்துக்கொள்ளப்படாமல் சுற்றிக்கொண்டுதான் இருப்போமோ என்னவோ?

அதைப்போலவே முதலாளி செய்வது சரி என்ற சிந்தனை கொண்டவர்களுக்கும், சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்களுக்கும் இருக்கும் வேற்றுமையும், தன்னைப்பற்றிய சுய தேடலை கொள்பவர்களுக்கும், இலட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களுக்கும், நம்பிக்கையை மட்டுமே கொண்டு வாழ்பவர்களுக்கும் இடையே இருக்கும் மாறுபட்ட சிந்தனையை இந்த கதை விளக்குகிறது.

ஒரு சாதாரண கதைக்கும், விலங்குகளை வைத்து எழுதப்படும் கதைக்கும் இடையே இருக்கும் வித்தியாசமே குணங்களை வைத்து மதிப்பீடு செய்யவும், தன்னுடன் பொருத்தி ஒப்பீடு செய்யவும் விலங்குகள் / நாய்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் எளிமையாக அமைவதுதான்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics Title Artகுறியீடு என்று எடுத்துக்கொண்டால், இந்த கதையில் இருக்கும் குறியீடுகளை மட்டும் வைத்து மிஷ்கின் பத்து வருஷம் படம் எடுக்கும் அளவுக்கு கதாசிரியர் நுணுக்கமாக வரைந்திருக்கிறார். உதாரணமாக புத்தகத்தின் முதல் பக்கத்தில் வரையப்பட்டு இருக்கும் கிர்பியின் கழுத்துப்பட்டையின் கயிறு அனைவரையும் சுற்றி ஒரு வட்டம் போட்டு இருப்பதில் ஆரம்பித்து, கதையின் முடிவை வாசகர்களுக்கு விடுவது வரை கதை முழுவதுமே குறியீடுகள்தான். அதுவும் கதையின் முடிவில் அந்த வீட்டில் தங்கிவிடுவதா? அல்லது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாயுடன் பயணத்தை தொடர்வதா? என்ற கேள்விக்கான விடையை படிக்கும் வாசகரிடமே விட்டுவிடுகிறார் கிரகம். அந்த முடிவை பொருத்து, வாசகர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அளவுடன் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் மனிதனாகவோ, அல்லது எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்க நினைக்கும் ஒரு இலட்சியவாதியாகவோ அடையாளம் கண்டுகொள்ளலாம்.

ஒரு சாதாரண கதை, ஒரு உளவியல் பரிட்சை என்ற நிலைப்பாடுகளை தாண்டி மூன்றாவதாக ஒரு விஷயத்தை கதாசிரியர் சொல்லி இருக்கிறார். நீண்டகால காமிக்ஸ் வாசகர்களுக்கு மார்வெல் காமிக்ஸ் பற்றியும், அதன் நெடுநாள் எடிட்டரான ஜாக் கிர்பியைப்பற்றியும் தெரிந்திருக்கும். தன்னுடைய முதலாளியின்மேல் கண்மூடித்தனமாக நம்பிக்கைகொண்ட முட்டாள் நாயின் பெயரை கிர்பி என்று வைத்து, அமெரிக்க காமிக்ஸ் வரலாற்றின் ஒரு மாபெரும் படைப்பாளியின் உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார், கிரகம்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics ivan reading the sign

இதைப்பற்றி கதாசிரியரிடம் நான் கேட்டபோது, சர்ச்சைகளை தவிர்க்க பிரபல நடிகர் ப்ரூனோ கிர்பியை மனதில் கொண்டுதான் அந்த நாய்க்கு கிர்பி என்று பெயரிட்டதாக விஷமத்துடன் சொல்கிறார்.

அதேசமயம் ஒரு கதாசிரியனின் உரிமை அந்த கதையை எழுதுவது வரை மட்டுமே என்றும் அதற்குப்பிறகு அதனை புரிந்துகொள்வது வாசகர்களின் உரிமை என்று சொல்கிறார்.

ஒரு நாயுடன் தொடர்பு கொள்ள நாம் கையாளும் வழிமுறைகள் செயல்படாமல் போக, கடிதம் எழுது என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத, ஆனால் தீர்வுகாண உதவிய ஒரு விஷயம். இதுபோன்ற செயல் சார்ந்த குறியீடுகள் மட்டுமின்றி ஓவியங்களின்மூலமும் பல குறியீடுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார், கதாசிரியர் கிரகம்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics last page

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics ivan listening Musicடின்டின் கதாசிரியரான ஓவியர் ஹெர்ஜிடம் அவர் வரைந்ததிலேயே அவருக்கு பிடித்தமான ஓவியங்கள் பற்றிக் கேட்டபோது இரண்டு ஓவிய கட்டங்களை மட்டுமே சொல்வார். அதில் ஒன்றில் ஒருவன் கடற்கரையில் இருப்பது போலவும், அதே கட்டத்தில் இன்னொருவன் எழுந்து வருவது போலவும், மூன்றாவதாக ஒருவன் ஓடுவது போலவும் வரைந்திருப்பார். மூன்று பேராக தெரிந்தாலும் செயலில் ஈடுபடுவது ஒரே ஒருவன் மட்டுமே. அவனது செயலை (Action) நமக்கு உணர்த்தவே ஹெர்ஜ் ஒரே கட்டத்தில், மூன்று தனித்தனி ஆட்களை வரைந்தார்.

ஒரு தொடர்ந்த செயலை ஒரு ஓவிய கட்டத்தின்மூலம் எளிமையாக உணர்த்திய அந்த கோட்பாட்டின்படி இந்த கதையிலும் கிரகம் பல இடங்களில் (மெனக்கெட்டு) அதுபோன்ற ஒரு தொடர்ச்சியான செயலை ஒரே ஒரு ஓவியத்தின்மூலம் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார். அதற்காகவே அவருக்கு ஒரு பெரிய பாராட்டு.

விலங்குகளை வைத்து எழுதப்பட்ட கதைகளில் Animal Farm & Watership Down ஆகிய இரண்டு மட்டுமே காலங்களை, நாடுகளை கடந்து கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் மூன்றாவதாக இந்த கதை அமைந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் மற்றுமொரு விஷயம் என்னவென்றால், கதாசிரியர் மறுபடியும் 10 ஆண்டுகள் வனவாசம் செல்லாமல், அடுத்த கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான்.

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Page No 16 The Good Dog Reviewதீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு தோட்டாக்கள் (6/6).

கதை & ஓவியம்: கிரஹம் சாஃபி

வெளியீடு: FantaGraphics Books அமெரிக்கா- (ஜூன் 2013)

பக்கங்கள்: 96

அமைப்பு: கருப்பு வெள்ளை.

விலை: $16.99

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான தீராநதியில் இந்தக் கட்டுரை வெளியானது. நன்றி, தீராநதி ஆசிரியர் குழு.

Saturday, May 13, 2017

4 ‘கனவா, நிஜமா?' - தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை

Chendhur Comics Issue No 1 Dated 1st Feb 1985 Front Cover

‘ப்ரிமானிஷன்', ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ', ‘சோர்ஸ் கோட்' உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள். இப்படங்களின் நாயகர்கள் எதிர்காலத்தில் வரும் சம்பவங்களைக் கணிக்கக்கூடிய அல்லது எதிர்காலத்துக்கே சென்று சம்பவங்களை மாற்றியமைக்கக்கூடிய திறனைப் பெற்றவர்கள். இவையெல்லாம் சமீபத்திய வருடங்களில் வெளியானவை. ஏறத்தாழ 37 வருடங்களுக்கு முன்பே தமிழில் இதுபோல ஒரு கதை வெளியாகியிருக்கிறது, தெரியுமா?

தமிழில் குழந்தைகளுக்கான தலைசிறந்த கதைசொல்லி வாண்டுமாமாவின் படைப்பான ‘கனவா? நிஜமா?'தான் அது!

Parvathi Chithirak Kadhaigal PCK No 15 Dated Aug 1993 VanduMama Kanava Nijama Coverதமிழில் காமிக்ஸ் என்று எடுத்துக்கொண்டால், அது முல்லை தங்கராசன், வாண்டுமாமா மற்றும் செல்லம் என்று மூன்று ஜாம்பவான்களை மையமாகக் கொண்டது. இவற்றில் தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை என்று ‘கனவா, நிஜமா?'வைச் சொல்லலாம்.

தமிழ் சித்திரக் கதைகளில் காமிக்ஸ் என்ற கதை சொல்லும் அமைப்பை மிகச் சரியாக உணர்ந்து, அதை முறையாகப் பயன்படுத்தி, வார்த்தைகளால் அல்லாமல், ஓவியங்களின் மூலம் கதையை விவரித்த படைப்பு இது.

வாண்டுமாமா + ஓவியர் செல்லம் கூட்டணி இக்கதையின் உயரத்தை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டுசென்றது. வாண்டுமாமாவின் மாஸ்டர்பீஸ்களிலேயே சிறந்ததாகப் பலராலும் மதிக்கப்படும் இக்கதை, வயது வேறுபாடுகளையும் காலத்தையும் கடந்து நிற்கிறது.

நாளையும் இன்றும்:

Vandumama 1நீலன் என்ற ஒரு ஏழை ஆட்டிடையன், ஒரு நாள் மலையுச்சியில் ஒரு விசித்திர புகையை நுகர்ந்து மயக்கமுறும்போது, வித்தியாசமான கனவொன்றை காண்கிறான். தன்னுடைய வீட்டில் வேறொருவன் குடியிருப்பதையும், தற்போதைய மன்னரும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டு, இன்றைய சேனாதிபதி மன்னராகி இருப்பதும், தளபதி ஒருவர் மட்டும் தப்பித்து, இவர்களை எதிர்த்து போராடுவதும் அவனுடைய கனவில் வரும் முக்கிய சம்பவங்கள். இவை அனைத்துமே பத்து ஆண்டுகள் கழித்து நடைபெறப்போகும் சம்பவங்கள். மறுபடியும் மயக்கமுறும் நீலன், தன்னுடைய இன்றைய காலகட்டத்தில் திரும்பி இருப்பதை உணர்கிறான். அதாவது நிகழ் காலத்திற்கு.

என்ன செய்வதென்றே தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் நீலன், பின்னர் தெளிவுறுகிறான். தன்னுடைய வீட்டருகே தற்போது சிறிய  செடியாக இருப்பதே, பத்தாண்டுகள் கழித்து தன்னுடைய கனவில் பெரிய மரமாகி இருப்பதை உணரும் அவன், அந்த செடியை வேரோடு பிடுங்கி விடுகிறான். தன்னுடைய இந்த செயலான,து பின்னர் மரமாகப்போகும் அந்த செடியின் எதிர்காலத்தை மாற்றியது போல, தன கனவில் கண்ட மற்ற நிகழ்வுகளையும் மாற்ற முடிவெடுக்கிறான். துணிந்து மன்னரிடம் செல்கிறான். ஆனால், அவனது வாதத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாத சூழலில், மன்னர் அவனை மனநலம் தவறியவன் என்றெண்ணி சிறையில் அடைக்க சொல்கிறார்.

Kanava Nijama Sample Page in Colour 2

Kanava Nijama Hero Neelan coming back as a heroசிறையில் இருக்கும் நீலனை மன்னரின் இளைய சகோதரன் சேனாதிபதியுடன் வந்து சந்தித்திக்கிறார். பத்து வருடங்கள் கழித்து இதே சேனாதிபதிதான் நீலனை காப்பாற்றுவது என்பதால், நீலனுக்கு அவரை தெரிகிறது. சேனாதிபதி அவர்களின் உடலில் இருக்கும் (வெளி ஆட்கள்  யாருக்கும் தெரியாத) அடையாளம் ஒன்றை சொல்லும் நீலன் அவர்கள் இருவரின் நம்பிக்கையை பெறுகிறான். நீலனின் கூற்றில் இம்மியளவும் உண்மை இருந்தால், தங்களின் உயிருக்கு ஆபத்தேற்படுவதோடில்லாமல், நாட்டின் எதிர்காலமே சீர்குலையும் அபாயம் இருப்பதை அவ்விருவரும் உணர்கின்றனர். மன்னரின் சகோதரர் நீலனை கோட்டையின் அகழியில் தள்ளிவிட்டு விட்டு, ’தப்பித்து சென்று, இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்று’ என்று சொல்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.

Kanava Nijama Sample Page in Colour

  • நீலன் என்னவானான்?
  • அவனால் அகழியை உயிருடன் கடக்க முடிந்ததா?
  • தளபதியின் திட்டங்கள் நடந்தேறியதா?
  • மன்னர் கொல்லப்பட்டாரா? 
  • அல்லது நீலன் தன்னுடைய திட்டப்படி இந்த நிகழ்வுகளை நிறுத்தினானா ?
  • எவ்வாறு இது நடக்கும்?
  • ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒரே ஒரு தனி நபரால் மாற்ற இயலுமா?

என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. விறுவிறுப்பான கதையுடன் உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் கொண்ட இந்த தொடர் கல்கி வார இதழில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

அற்புத அறிவியல் புனைவு

குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979-ம் ஆண்டு 'கல்கி' வார இதழில் 25 வாரத் தொடராக வெளிவந்த இந்தக் கதை, தமிழின் ஆகச்சிறந்த சித்திரக்கதைப் படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளன.

  • இதற்கு முன்னர் தமிழில் சில 'சயின்ஸ் ஃபிக்‌ஷன்' காமிக்ஸ் வந்திருந்தாலும், சரியான லாஜிக்குடன் படைக்கப்பட்ட முதல் படைப்பு இது.
  • சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் சமகாலத்திலேயே நிகழ்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அக்காலத்திய மரபுப்படி மன்னர் காலத்துக் கதையின் ஊடே ‘ப்ரிமானிஷன்' பற்றிய விளக்கத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப் பட்டிருப்பது கதையின் நேர்த்தி.
  • நிகழ்காலத்தில் சிறிய செடியாக இருப்பதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு மரமாகவிருப்பதை உணர்ந்து, அதை வேரோடு பிடுங்கி, எதிர்காலத்தை மாற்ற முடியும் என்பதை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் விளக்கிய எளிமையான கதை சொல்லும் பாணி இந்தக் கதையின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

புதுமை ஓவியப் பாணி

  • Artist Chellam Photoகஸ்தூரி ராஜா, வி. சந்திரன் போன்ற சித்திரக்கதை ஜாம்பவான்கள் வழியில் புள்ளிகளை மட்டுமே கொண்டு, கறுப்பு வெள்ளையில் நிழலூட்டும் ஓவியப்பாணியான ‘ஸ்டிப்ளிங்' என்ற தனி ‘ஷேடிங்' முறையை ‘ஓவிய மேஸ்ட்ரோ' செல்லம் இக்கதையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
  • முழு வண்ண ஓவியங்களில் பலவகையான அடர்த்தியில் வண்ணங்களை ஏற்றலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களில் தோற்ற ஆழம் கொடுக்கப் பயன்படும் ‘கியாரஸ்க்யூரோ' என்ற ஓவியப் பாணியை தமிழுக்கு, வெகுஜனப் பத்திரிகையில் முறையாக அறிமுகப்படுத்தியது இந்தக் கதைதான்.
  • வாரத்துக்கு இரண்டு பக்கங்கள் என வெளியான இக்கதை, தொடர்கதைகளுக்கே உரித்தான ஒரு முடிச்சை இரண்டு பக்கங்களுக்கொரு முறை கொண்டிருந்தாலும்கூட, முழுக் கதையாகப் படிக்கும்போது உறுத்தல் இல்லாமல்தான் இருக்கிறது.

The Hindu Tamil Daily Dated 22nd April 2016 Ilamai Puthumai Segement Page No 02 Kanava Nijama

கனவா, நிஜமா?

கதை: வாண்டுமாமா

ஓவியம்: செல்லம்

பக்கங்கள்: கறுப்பு வெள்ளையில் 52 பக்கங்கள்

அமைப்பு: 1979-ல் 25 வாரத் தொடர்கதையாக வெளியானது.

குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, கனவா, நிஜமா? அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்

Related Posts with Thumbnails